Wednesday, April 1, 2020

கொரோனா: வெப்பநிலையும், பிற கூறுகளும்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் 42322 உயிர்களை இதுவரை இழந்திருக்கிறோம்.ஏறத்தாழ 32898 உயிர்கள் அபாயகட்டத்தில் இருக்கின்றன.
மனிதர்களை வென்றுவிடும் முயற்சியில் கொரோனா தனது ஆக்டோபஸ் கரங்களை 180 நாடுகளில் நீட்டியிருக்கிறது. மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து உயிர் இழப்புகளை தடுக்கும் நடவடிக்கையில் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இதுவரை நோய் தாக்கி இறந்தவர்கள் வயது, பாலினம், முந்தைய நோய்கூறுகள் குறித்த தகவல்களில் புதிய விவரங்கள் கிடைத்துள்ளன.

வயது அடிப்படையில் பார்க்கின்ற பொழுது அதிகமான நோய் தாக்கியவர்களில் 27.7% விழுக்காடு இறப்பு 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கே நிகழ்ந்திருக்கிறது. 10 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மிகக்குறைவான விழுக்காடு மரணம் நிகழ்ந்திருக்கிறது. 9 வயதுக்குட்பட்டவர்கள் உலகம் முழுவதும் நோய் தொற்றிலிருந்து மீண்டிருக்கிறார்கள். எனில் மனித உடல் வளர்ச்சியில் எதிர்ப்பு சக்தி அதிகமிருப்பது இளமை பருவத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலின வகைப்பாட்டின்படி பெண்களைவிட ஆண்கள் (2.8%)அதிகமாக மரணம் அடைந்திருக்கிறார்கள். பல்வேறு சமூக பொருளாதார காரணங்களால் உடல் மீதான அக்கறை இல்லாதவர்களாக இருப்பதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்கனவே வேறு நோய் கூறுகள் இருக்கின்றபட்சத்தில் நோயிலிருந்து மீள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றன. அந்த வகையில் இதயநோய் (10.5%), நீரிழிவு(7.3%), நுரையீரல் நோய்(6.3%), அதீத மனஅழுத்தம் (6.0%) மற்றும் புற்றுநோய் (5.6%) பாதிப்புகள் இருப்பது நோயிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. எந்தவிதமான நோய் கூறுகளுமின்றி ஆரோக்கியமான நபர் கொரோனாவினால் இறந்தது(0.9%) அளவிலேயே இருக்கின்றது. தனி மனித உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துதலில் சுற்றுப்புற சூழலின் வெப்பநிலை முன்னிலையில் இருப்பதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சீனாவை சேர்ந்த அறிஞர்கள் 100 நகரங்களில் கால நிலையை ஆராய்ச்சி செய்ததில் கொரோனா பரவலுக்கும் வெப்பநிலைக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். சூரிய ஒளி செங்குத்தாக விழும் இடங்களில் புற ஊதா கதிர்கள் அதிகமாக இருக்கும். அதிகரிக்கும் புற ஊதா கதிர்கள் வைரஸ் பரவலை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.பூமியின் தென்பகுதிகளில் கோடைகாலம் துவங்கியிருப்பதால் வெப்பநிலை அதிகரிக்கும். எனவே கொரோனா பரவல் குறைவாகவே இருக்கும் என்கின்றனர். கொரோனாவினால் பாதிப்படைந்த சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் சராசரி வெப்பநிலை 3 முதல் 17 டிகிரி செல்சியஸ் அளவிலேயே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இத்தாலி போன்ற நாடுகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சில இடங்களில் பதிவாகி இருக்கின்றது. ஆராய்ச்சியாளர்கள் வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் க்கு அதிகமாக இருக்கின்ற வரையில் வைரஸ் பரவல் அல்லது நோய் தொற்று குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்கின்றனர்.

இத்தாலியிலும் இந்தியாவிலும் ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தான் முதல் கொரோனா பாதிப்பு நபர் கண்டறியப்பட்டனர்.ஆனால் இத்தாலியில் இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பு மிகமிக அதிகம். சீனாவும் இந்தியாவும் மக்கள் தொகை அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் இருக்கின்ற நாடுகள். பல்வேறு சமூக கலாச்சார வேறுபாடுகள் கொண்டவை. உலகளாவிய வர்த்தகம் கொண்ட நாடுகள்.எனினும் வைரஸ் பாதிப்பின் அடிப்படையில் இந்திய அரசு வைரஸ் மீதான தனது கட்டுப்பாட்டை அமெரிக்க, சீன அரசை போல முழுமையாக இழந்துவிடவில்லை என்பதற்கு மிக முக்கிய காரணமாக இங்கு நிலவும் தட்பவெப்ப நிலையை கூறலாம். வட அமெரிக்காவைவிட தென் அமெரிக்க நாடுகள் குறைவான பாதிப்பையே அடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்க நாடுகளில் சற்றே மிதமான வெப்பநிலை நிலவும்.சீனாவில் முதல் கொரோனா பாதிப்பு ஜனவரி மாதம் 10 ஆம் தேதியும் அமெரிக்காவில் அதே மாதம் 20 ஆம் தேதியும் கண்டறியப்பட்டது. ஏறத்தாழ இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான தட்பவெப்ப நிலையை கொண்டிருக்கின்றன. கொரோனா பாதிப்பு சீனாவைவிட அமெரிக்காவில் அதிகமாக இருக்கின்றது. குளிர் பிரதேசங்களில் வைரஸ், பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும் முக்கியமான ஒன்று.

இந்தியா போன்ற நாடுகளில் தற்போது நிலவும் கோடைகாலம் மே, ஜூன் மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும். அதன் பிறகு வருகின்ற மழைக்காலமும் குளிர்காலமும் மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களும், தொற்று பரவாமல் தப்பித்தவர்களும் எதிர்வரும் மழை, குளிர் காலங்களில் கொரோனா வைரஸிடமிருந்து தற்காத்துக் கொள்ள மிகப்பெரிய அளவில் போராட வேண்டியிருக்கும். தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில் அதிகமான பாதிப்பு இருக்கும். அதற்கான ஆயத்தங்களை அரசும் நாமும் இப்போது செய்யவேண்டும்.இயற்கை நிகழ்த்துகின்ற காட்சிகளை நிகழ்தகவின் எந்த வீதத்தில் செயல்படுத்தும் என்பது ஒருவரும் கணிக்க முடியாது. எதுவும் கடந்து போகும்.

No comments:

Post a Comment