Friday, April 3, 2020

கொரோனா: ஒலியும் ஒளியும்

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலுக்கு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளாகி இருக்கின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 50 ஆயிரத்தை தாண்டிவிட்டது. வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய இடத்தில் இருக்கும் இந்தியாவில் கொரோனாவின பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று(03.04.2020) காலை 9.00 மணியளவில் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் வெளியிட்டிருக்கும் காணொளியில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (05.04.2020) அன்று இரவு 9.00 மணியளவில் அனைவரும் வீட்டிலுள்ள விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள், டார்ச் விளக்குகள் அல்லது அலைபேசி விளக்குகளை 9 நிமிடங்கள் ஒளிரவிடுங்கள் என்கிறார். இதுபோலவே கடந்த 19.03.2020 வியாழக்கிழமை இரவு 8மணிக்கு நேரலையில் ஒருநாள்(22.03.2020 ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு உத்தரவு குறித்து பேசினார்.மேலும் 22.03.2020 காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை ஊரடங்கு இருக்குமென்றும் அன்று மாலை 5 மணி அளவில் 5 நிமிடம் அனைவரும் கைத்தட்ட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு 24.03.2020 அன்று 8 மணிக்கு நேரலையில் வந்து நள்ளிரவு 12:00 மணிமுதல் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தினார்.

கொரோனா தொற்று குறித்து தேசமக்களுக்கு உரையாற்றிய போது அறிவியல் நமக்கு இதுவரை கைகொடுக்கவில்லை என்றவர், ஆயுஷ் மருத்துவர்களுடனான காணொளி கலந்துரையாடாலில் சான்றுகள் அடிப்படையிலான மருத்துவ முறைகள் குறித்து தனது எதிர்பார்ப்புகளை நிறுவுகிறார். தர்க்க ரீதியாக மருத்துவ முறைகளுக்கு சான்றுகள் குறித்த தரவுகளை வினவுகின்ற பிரதமர் அவர்கள் மக்களிடம் வைக்கின்ற சில கோரிக்கைகள் விவாதப் பொருளாக மாறுகின்றன. உண்மையில் பிரதமர் அவர்களின் கோரிக்கை என்பது தேச மக்கள் குறித்த எத்தகைய புரிந்துகொள்ளல் என்பதுதான் இங்கு நிலவுகின்ற கேள்வி.

பிரதமர் அவர்களின் கொரோனா தொற்று குறித்த கோரிக்கைகள் மக்களின் மீதான அன்பு என்று கருதுவோமெனில் 24.03.2020 இரவு 8:00 மணியளவில் நேரலையில் தோன்றி நள்ளிரவு 12:00 மணி முதல் ஊரடங்கு நடைமுறை படுத்தியிருக்க வேண்டியதில்லை.அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஏறத்தாழ் 20க்கும் மேற்பட்டவர்கள் சாலைகளில் நடந்து செல்லும்போது உயிரிழந்தனர். 24.03.2020 அன்று இரவு அமுல்படுத்திய ஊரடங்கு உத்தரவை முன்னதாகவே மக்களுக்கு தெரிவித்து இருக்கலாம். மக்களும் ஓரளவு பேரிடரை எதிர்கொள்ள தங்களை தயார் செய்து கொண்டிருப்பார்கள். சற்றே அதற்கும் முன்பாக 22.03.2020 அன்று ஒருநாள் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தது. மக்களுக்கு 19.03.2020 அன்றே பிரதமர் தெரிவித்திருந்தபடியால் 22.03.2020 அன்று மக்களுக்கு எந்தவிதமான இடையூறுகளும் இல்லை. ஆனால் அன்று மாலை 5 மணியளவில் மக்கள் பல இடங்களில் கை தட்டுவதற்காக சமூக விலகலை மீறியிருந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் பணியிலிருப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அந்த அறிவிப்பு இருந்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று கை தட்டுவதும், பாத்திரங்களை அடித்து சப்தம் செய்வதும், சங்கு ஊதுவதும் என்ன மாதிரியான மனநிலையில் நாம் இருக்கிறோம் என்பதை கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய சந்தர்ப்பத்தை உருவாக்கிவிடுகிறது. பிரதமர் அவர்கள் மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் மக்களாட்சியின் ஒரு அங்கம். அவருடைய சொல்லும் செயலும் இந்த நாட்டில் வசிக்கின்ற கடை கோடி மனிதனுக்கும் வழிகாட்ட வேண்டியது மிகமுக்கியம். ஆனால் அது தவறாக போய்விடக்கூடாது. இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 05.04.2020 அன்று இரவு 9.00 மணியளவில் அனைவரும் வீட்டிலுள்ள விளக்குகளை அணைத்துவிட்டு மொபைல் விளக்குகளை 9 நிமிடம் எரியவிடவேண்டும் என்ற கோரிக்கை நமது அறிவியல் மற்றும் தர்க்கவியலுக்கு முழுவதும் எதிராக இருக்கிறது. தேசம் முழுவதும் கொரோனா இருளை போக்கிட விளக்கேற்ற வேண்டுமென்றால் அதற்காக பிற விளக்குகளை ஏன் அணைக்க வேண்டும். அவ்வாறு விளக்கேற்றுவதையோ அல்லது கை தட்டுவதையோ இந்த அரசு எவ்வாறு மதிப்பீடு செய்கிறது. வீடற்ற ஏழைகள் பால்கனியில் நின்று கை தட்டுவதற்கு எப்படி வாய்ப்பிலையோ அதுபோலவே விளக்குகளை ஏற்றுவதற்கும் வாய்ப்பில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் இராகுல் காந்தி அவர்கள் கொரோனா குறித்தும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் சுட்டுரையில் பதிவிடுகிறார். அதன் மீதான அக்கறையில்லை என்றாலும் மக்கள் மீதான அக்க்றையுடன் சில நடவடிக்கைகளை முன்னரே எடுத்திருந்தால் கை தட்டவும் விளக்கேற்றவும் கோரிக்கை வைத்திருக்க தேவை இருந்திருக்காது. மருத்துவர்களும் பணியாளர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா தொற்று நோயாளிகளை கையாளுவது அணு உலைகளில் வேலை பார்ப்பது போல இருக்கின்றது என இத்தாலியில் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஹோட்டல்களில் சர்வர்கள் அணிந்திருக்கும் தலைக்கவசங்களை அணிந்தபடி சில மருத்துவர்கள் பணிபுரிவதும் பணிபுரிய சொல்வதும் எத்தனைக் கொடிய மனித உரிமை மீறல்.
கொரோனா தொற்றுக்கு மதச் சாயம் பூசுவதும் நிகந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு ஆதராவாக சில வார்த்தைகளை கூட பிரதமர் அவர்கள் கூறவில்லை. அவர்களும் இந்த தேசத்தின் மக்கள் என்பதை எப்போது உணரப்போகிறோம்.

கை தட்டுவதும் விளக்கேற்றுவதும் அண்டம் பேரண்டம், பால்வழி மண்டலம் வரை சென்று நமது நாட்டை காக்குமென்றும் போலி அறிவியல் அறிஞர்கள் போதனைகள் நாடெங்கும் நிரம்பி வாழ்கின்றன.அதுமட்டுமின்றி 5 மணி 5 நிமிடம் என்பது புதன் கிரகத்தையும் 9 மணி 9 நிமிடம் என்பதும் செவ்வாய் கிரகத்தையும் சாந்தி செய்யுமென்று பிதற்றல்கள் வேறு. எதுவென்றாலும் முன்னரே தெரியப்படுத்திவிட்டால், இடர் எதுவந்தாலும் தாங்கிக் கொள்வோம். வேலைக்காரன் என்றொரு தமிழ் திரைப் படத்தில் கதாநாயகன் வில்லனுக்கு தெரியாமல் தனது கருத்துக்கு ஒப்புதலை பெற மக்களிடம் நள்ளிரவில் விளக்குகளை எரியவிடச் சொல்லுவான்.கதாநாயகர் பிரதமர் அவர்கள் என்பதிலும் மக்களே விளக்குகளை எரியவிடப் போகிறார்கள் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால் வில்லன் இங்கு கொரோனா வைரஸ் என்பதை உணரவேண்டும். அதற்கு நாம் விளக்குகளை அணைப்பதும் எரியவிடுவதும் ஒன்றுதான். அது தன் வேலையை செய்து கொண்டே தான் இருக்கும். சமூக விலகல் தவிர்த்து விடுமுறையோ ஊரடங்கோ விளக்கு எரிவதோ அணைவதோ சப்தமிடுவதோ மெளனமாக இருப்பதோ கொரோனாவை ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான் நிதர்சனம்.

2014 ஆம் ஆண்டில் இந்த அரசு பதவியேற்ற பொழுது லட்சோபலட்ச மக்கள் நாட்டின் வளர்ச்சியின், நம்பிக்கையின் குறியீடாகவே பிரதமர் அவர்களை எண்ணியிருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே 2019 ஆம் ஆண்டும் நிகழ்ந்தது. மக்கள் சக்தி எப்பொழுதும் மிகப்பெரியது. அதுவும் குடியரசு நாட்டில் மக்கள் மிகவும் வலிமையானவர்கள். பிரதமர் அவர்கள் தனது ஆலோசனை குழுவை மறுபரிசீலனை செய்வதும் மாற்றியமைப்பதும் காலத்தின் கட்டாயம். ஏனெனில் மக்கள் எப்பொழுதும் புரட்சிகளை சப்தமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் செய்துவிடுகின்றனர். ஏனெனில் உலகின் தலைசிறந்த சொல், செயல்.

No comments:

Post a Comment