Sunday, July 16, 2017

மதியழகி

உறங்கும் தருணங்களில்
எப்பொழுதும் ஏதேனுமொன்றாக
நுழைந்துவிடுகிறது கனவுகள்
ஒன்றாகவோ பலவாகவோ…

சில நேரத்து
விழித்தெழும் பொழுதுகளில்
எழுதக்கூடியதாகவும் இல்லை…..

பெரும்பாலும்
இருள்சூழ்ந்த கருமையாகவே
இருக்கிறது காட்சிகள்….

கனவுகளில் எப்படியும்
நுழைந்துவிடும் அசாத்தியமானவர்கள்
உளவாளிகள்….

மெய்யாகவே
நடந்துவிட்ட
நிகழ்வுகளின் சாட்சிகள்…..

இன்னும்
நிகழ்ந்துவிடாத
நிகழ்வுகளின் துருப்புகள்….

கனவுகளின்
பெருவெளியில் உலவும்
பல உளவாளிகள்
ஒன்றேயென ஐயமுற்றதுண்டு….

ஒரு கனவில்
நுழைந்து கலவரம் செய்து
பிரிதொருகனவில்
நுழைவது எளிதாகவே
வந்துவிடுகிறது உளவாளிகளுக்கு……

ஒருவர் கனவை
பிரிதொருவருக்கு இடமாற்றும்
உளவாளிகள் எப்பொழுதும்
முகமூடியை தனியாக
கழற்றுவதில்லை….

மறைத்துகொண்டதே
முகமாகிபோன உளவாளிகள்
மெய்மையில் எப்பொழுதேனும்
தவறுதலாய் நுழைந்துவிடும்
தருணங்களில் துரோகிகளாய்
தொலைதலே நிதர்சனம்!

No comments:

Post a Comment