Saturday, May 30, 2020

மையாத்தி

பிரபஞ்சப் பெருவெளியில் உலவும் எண்ணற்ற நட்சத்திரங்களில் ஒன்றாக தன்னைக் கருதி கொண்ட மனிதர்களில் ஒருவன் தனது முழு ஆயுட்காலத்திற்கும் முந்தைய நிலையில் நட்சத்திரங்கள் வெடித்து சிதறி பெரும் நீர்ப்பரப்பிலோ,நிலப்பரப்பிலோ விழுவதற்கும் வாய்ப்புகள் உண்டெனும் அறிவியல் உண்மையை உணர்ந்து கொள்ளும் முன்பாக எழுதிய அனுபவங்களின் பதிவு. வாழ்க்கையை வழிநடத்தும் இலக்குகளை தேர்வு செய்வதில் அலைவுறுகின்ற விழுமியங்கள் ஏதுமற்ற சராசரி மனிதனின் அனைத்து இடர்பாடுகளிலும் சிக்கி சிதறிய மனிதனின் பேரிடர் கால துயர் மிகுந்த தருணங்களின் மிகச் சிறிய சாதாரணமான அவலச்சுவையுடைய எழுத்துகளால் பதிவு செய்யப்பட்ட கவிதைகள் என்றே கருதுகிறேன். 

உயினங்கள் தோன்றிய காலந்தொட்டு இருந்து வரும் ஆண், பெண், திரிபு பாலினங்கள் ஒன்றின் மீது பிரிதொன்று செலுத்துகின்ற ஆகச் சிறந்த அதிகாரம் அன்பு. மனிதர்களின் மீதானஅன்பினை, பிரியத்தை, காதலை நெறிப்படுத்தும் முறைகளில் தொன்று தொட்டு இருக்கின்ற பல்வேறு உளவியல் சிக்கல்கள் இந்தக் கவிதைகளை எழுதும் போதும் இருந்திருக்கிறது. கவிதைகளுக்கு பெயர் சூட்ட முயன்று தோற்ற தருணங்களில் திடீரென நினைவுகளில் தோன்றி மறைந்த பெண்களின் பெயர்களைக் கொண்டே தலைப்புகள் இறுதியடைந்திருக்கிறது. இந்த படைப்பில் தோன்றும் பெண் பெயர்கள் 100 சதவீதம் கற்பனையானவை. சமகாலத்தில் வாழ்கின்றவர்களுடன் அல்லது இறந்தவர்களுடன் இருக்கின்ற எந்த விதமான ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது. 

பல வருடங்களாக கவிதைகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றிருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடவில்லை. மையாத்தி என்னும்தமிழ் சொல்லுக்கு மயங்குதல் என்று பொருள்.சொல்லும் பொருளும் மனதில் ஏற்படுத்திய மாற்றத்தை அமேஸான் உதவியுடன் புத்தகமாக்குவது என்று முடிவானது. இந்த பூமியில் மனிதர்களின் பெருவாழ்வு மயங்குதல் தானே. மனிதன் தன்னை முன்னிருத்தி பார்க்கும் போது மயங்குதல் தனக்கானது. ஆனால் அது பிறருக்குமானது தான். அவ்வாறு வாழ்க்கையின் ஏதோவொரு பகுதியில் எதன் பொருட்டோ மயங்கிய தருணங்களில் உதித்த இந்த கவிதைகளை மையாத்தி என்று பெயர் சூட்டுவது தானே பொருத்தமானது. ஒன்றிற்காக மயங்குவதும் அதிலிருந்து மீள்வதும் மீண்டும் பிறிதொன்றிற்காக மயங்குவதும் தானே மானுட வாழ்க்கையின் இயல்பு. இடைப்பட்ட காலங்களில் ஏதேனும் ஒன்றை மயக்கத்தின் ஊடாக பயனுற செய்துவிடும் தருணங்களில் வாழ்க்கையில் வீசும் பரிமளம் அலாதியானது. அத்தகைய வாசனை சில நேரங்களில் மனிதனைகடவுளாக்கவும் சில நேரங்களில் மிருகமாக்கவும் முடியும். இந்த கவிதைகளில் எங்கேனும் மனிதர்கள் தங்களை அல்லது சக மனிதர்களை கண்டெடுத்தால் அவர்களிடம் இன்னும் தீர்க்கமாக அன்புசெலுத்துங்கள், நம்பிக்கை வையுங்கள். ஏனெனில் அவர்கள் கடவுளின் குறைப் பிரசவ குழந்தைகள். 

No comments:

Post a Comment