Wednesday, May 13, 2020

தேவகி

பால்யத்து நினைவுகள்
அப்படியே இருக்குமா என்பது
தெரியவில்லை.

கரடி பொம்மையும்
கிளைடரும் கடையில்
வாங்கிய நாளொன்று.

வீட்டு முற்றத்தின்
எதிரே இருந்த மைதானத்தில்
பறக்க முயன்ற கிளைடர்
உடைந்துபோனது.

நிலவின் வெளிச்சம் கலந்து
திடீரென பெய்த
தூரல் மழை.

தரையில்
விழுந்ததும் இருள்
கவ்வியது.

மூன்றடியைவிட
சற்றே உயரம் கூடிய
குழந்தையொன்று சாலையில்.

கைகளை நீட்டியபடி
சுழன்று விளையாடும் அவள்
தலைமுடியை நனைத்து விழுந்தது.

ஆரஞ்சு நிற உடையில்
மகிழ்ச்சியை அள்ளிப்பருகிய
குழந்தையின் கைகளில்
யாரோ பால்யத்தில் தொலைந்த
கரடி பொம்மை.

உடைந்த கிளைடரின்
இறக்கைகள் அலைவுறும்
சில பகல்நேர கனவுகளில்
வாஞ்சையோடு!

No comments:

Post a Comment