நேச்சர் இதழ் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு இதழ். புகழ்பெற்ற அறிஞர்கள் பலருடைய ஆய்வுக்கட்டுரைகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளன. இந்திய பல்கலைக்கழகங்களில் சமீப காலங்களில் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகள் குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது கவனத்திற்குரியது.
*****
இந்தியாவில் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல குடிமக்கள் வீதிகளில் நின்றுகொண்டு போராடுவதை பல வாரங்களாக உலகமே பார்த்துக்கொண்டிருந்தது. பாரபட்சமான புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை பல்லாயிரக்கணக்கானோர் வாசித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சட்டம் ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது. இந்த நாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தப்பி இந்தியாவிற்கு வருகின்ற மதச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. உண்மையில் இந்தச் சட்டத்தின் நோக்கம் பாராட்டப்படவேண்டியதுதான். ஆனால் குடியுரிமைக்கு யார் விண்ணப்பிக்க முடியும்- முடியாது என்பது குறித்த முடிவுகள் மதநம்பிக்கைகள் அடிப்படையில் எடுக்கப்படும் என்பதுதான் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. அதிலும் முஸ்லிம்களை முழுமையாக இந்தச் சட்டம் விலக்க வேண்டுமென கூறுகிறது. அனைத்து மதமக்களும் சட்டத்தின் முன்பாக சமம் என்ற அடிப்படை கொள்கையை மீறுவதாக இந்தச் சட்டம் இருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக அமைதியான சில ஆர்ப்பாட்டங்கள் வன்முறையை சந்தித்து வருகின்றன. பல்கலைக்கழகங்கள் வன்முறையை எதிர்கொள்ளும் சக்தி கொண்டவை அல்ல. புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது, அங்குள்ள மாணவர்கள் தங்குமிட கட்டணம் உயர்வினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி 5 ஆம் தேதி மாலை நேரம், முகமூடி அணிந்து, இரும்பு கம்பிகள், கற்கள் மற்றும் மரக்கட்டைகள் ஏந்திய சிலர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களை தாக்கியுள்ளனர். சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்படி, நகர காவல்துறை பாதுகாப்பினை வழங்கத் தவறிவிட்டதாக தெரிகிறது.
படுகாயமடைந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் இரத்தக்களரி வீடியோக்கள் பரவலாக பகிரப்பட்டுள்ளன. சமஸ்கிருத நூல்களை ஆராய்ச்சி செய்யும் பார்வைக் குறைபாடுள்ள மாணவர் சூர்யா பிரகாஷ் தனது அறையில் தாக்கப்பட்டுள்ளார். பிராந்திய மேம்பாட்டு ஆய்வுக்கான ஜே.என்.யு மையத்தின் ஆராய்ச்சியாளரான சுச்சரிதா சென் தான் அரை செங்கல் அளவிலான கல்லால் தலையில் தாக்கப்பட்டதை நேச்சரிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில், இந்தியாவின் இரண்டு பழைய பல்கலைக்கழகங்களில் - புதுதில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் காவல்துறை அத்துமீறி நுழைந்தது. மாணவர்கள் தாக்கப்பட்டனர், பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தன, கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு இடையூறாக இரு நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. அப்பாவி மாணவர்களுக்கு காவல்துறையினர் தீங்கு விளைவிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று ஜாமியா மில்லியாவின் துணைவேந்தர் நஜ்மா அக்தர் கூறினார்.
காவல்துறையின் தீவிர நடவடிக்கையின் காரணமாக சர்வதேச நிபுணர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். இப்போது கேம்பிரிட்ஜில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பொருளாதார வல்லுநராக பணிபுரிகின்ற ஜே.என்.யு முன்னாள் மாணவர் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியும், இந்தியாவில் இளங்கலை கல்வி பயின்ற உயிரியலாளரும் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் தலைவருமான நோபல் பரிசு வென்ற வெங்கி ராமகிருஷ்ணனும் அடங்குவர். மேலும் புதிய சட்டத்தையும் அவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் புதிய குடியுடிமைச் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பலர் வருத்தப்படுகிறார்கள். ஆனால் கருத்துச் சுதந்திரம் ஒரு பல்கலைக்கழகத்தின் பணிக்கு முக்கியமானது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்; அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக குடிமக்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களுடைய உரிமை, அது சலுகை அல்ல; அத்தகைய கருத்து வேறுபாடுகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். அது இல்லாமல், எந்தவொரு எதிர்க்கருத்தையும் யாரும் பொதுமக்களுக்கு முன்வைக்க முடியாது - தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் அதிகாரத்திற்கு வெளியே இருந்த போது அதைத்தானே செய்தார்கள்.
இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள் எச்சரிக்கையாக பேசவேண்டும், ஏனென்றால் பல்கலைக்கழக வளாகங்களில் காவல்துறைகளை பயன்படுத்துவது, அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தியா அரசின் அதிகாரிகள் தங்கள் நாட்டின் பல்கலைக்கழகங்களையும் மக்களின் பேச்சு சுதந்திரத்தையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பிரதம மந்திரியின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் கிருஷ்ணசாமி விஜயராகவனின் வார்த்தைகளை கவனிக்க வேண்டும்.“கல்லூரிகள் கற்றல், கலந்துரையாடல், மாறுபட்ட கருத்துக்களுக்கு இடையிலான கூட்டு விவாதம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான இடங்கள். அங்கு வன்முறைக்கு இடமில்லை”
நேச்சர் இதழின் வலைதளம் சுட்டி(Protect India’s universities)
No comments:
Post a Comment