சுதந்திர இந்தியாவில்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் .
பிழைப்பிற்காக மாநிலங்களின்
எல்லைகளை தாண்டியவர்கள் .
கொரோனாவின் கொடுந்துயரில்
வேலை இழந்தவர்கள்.
கருணையற்ற அரசுகளின்
மதிகெட்ட அறிவிப்பால் புலம் பெயர்கிறார்கள்.
பெற்றோர்களுடன் குழந்தைகளும்
நடந்து கொண்டிருந்தார்கள்.
சுயவிவரம் ஏதுமின்றி சிலர்
வெறும்காலில் நீர் ஊற்றி
வெறும் வயிற்றில் பாலூற்றினார்கள்.
அரசு இயந்திரங்கள் அதிகாரமிடுக்குடன்
பார்த்துக் கொண்டேயிருந்தன.
காலுடைந்த மனைவியை
தோள்களில் சுமந்தபடி கணவன்
நடந்துகொண்டிருந்தான்.
பெயர்தெரியா மனிதரெல்லாம்
பிரியமாக உணவளித்தார்கள்.
குழந்தை ஒன்றை கையிலேந்தி
நடந்துகொண்டிருந்தாள்
சிவப்பு நிற உடையணிந்த சிறுமி ஒருத்தி.
பெரியமனது கார்காரர்கள்
வழிச் செலவிற்கு பணம் கொடுத்தார்கள்.
மாவட்ட எல்லைகளை தாண்டிய தருணங்களில் பல நூறு மக்கள்
சில ஆயிரமாகியது.
வெறும்கால்களில் நடந்தவர்கள்
பாதங்களெல்லாம் வெடித்து கிழிந்துவிட்டன.
தனக்கும் தனது சகோதரிக்கும்
சேர்த்து உணவு பொட்டலம் வாங்கிய குழந்தையின் முகத்தில்
நிம்மதி தெரிந்தது.
குடும்பத்துடன் வந்த
இரட்டை மாட்டு வண்டியில்
இறந்துவிட்ட ஒரு மாட்டின்
நுகத்தடியில் நுழைந்திருந்தான்
தகப்பனொருவன்.
மனிதர்கள் மனிதர்களுக்குள்
உதவிக் கொண்டார்கள்.
தந்தைக்கு ஓய்வு கொடுத்து
மூன்று சக்கர மிதிவண்டியை
சிறுவன் ஒருவன் மிதித்துக் கொண்டிருந்தான்.
மனிதர்கள் விலங்குகளுக்கும்
உதவி செய்தார்கள்.
அரசு இயந்திரங்கள் ஆணவத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்தன.
மாநில எல்லைகளை கடந்தபோது
சில ஆயிரங்கள்
பல நூறாயிரங்களாகியது.
பல நாட்கள் நடந்தவன்
பாதிவழியில் தன் மகன் இறந்த செய்திகேட்டு ஓலமிட்டான்.
விரைவு ரயில் ஒன்று
வண்டி பாதையில் உறங்கியவர்களை சப்தமின்றி கொன்றுபோட்டது.
நடைவழியில் குழந்தை பெற்ற பெண்ணொருத்தி எஞ்சிய தூரத்தையும்
நடந்தே கடப்பதென்று முடிவு செய்தாள்.
வழி நடையில் சென்றவர்கள்
வாகனங்கள் மோதி இறந்தார்கள்.
வாடகையின்றி வீடுதரமறுத்த உரிமையாளர்
விரட்டியடித்த தகப்பனொருவன்
நோய்வாய்ப்பட்ட இளவயது மகனை
கட்டிலோடு தொட்டில் கட்டி
நடந்துகொண்டிருக்கிறான்.
நீரின்றி உணவின்றி நிழல்தரும் மரமின்றி
தனிவழியாய் வந்தவர்கள்
துணையின்றி துவண்டு போயினர்.
அரசு இயந்திரங்கள் அலட்சியமாக
பார்த்துக் கொண்டேயிருந்தன.
நடந்துகொண்டே தாயொருத்தி
இழுத்துச் சென்ற
சக்கரம்வைத்த சூட்கேஸ் ஒன்றில்
உறங்கியபடியே தொங்கிய
குழந்தைக்கு ஐந்து வயதிருக்கும்.
நடந்து கொண்டிருப்பவர்களின்
சாதி ஒன்றல்ல
மதம் ஒன்றல்ல
பாலினம் ஒன்றல்ல
மாநிலம் ஒன்றேயல்ல
தேசம் ஒன்று
நம்பிக்கைகள் ஒன்று
சொந்த ஊருக்கு
சென்றுவிட வேண்டும் எப்படியும்
சொந்த ஊருக்கு
சென்றுவிட வேண்டும்.
எப்பொழுதும் வெளியில் வரும்
எமனுருவ முதலையொன்று
இப்பொழுதும் வடிக்கிறது
இரக்கமின்றி நீலிக்கண்ணீர்.
அச்சரமே பிசகாமல்
அடுத்துவந்து அலறுகின்ற
அன்பற்ற ஆந்தையது காண்.
சென்றதினி மீளாது மாந்தர்களே
கற்றதுதான் கல்வி
கனவிலும் நிற்பதுதான் வாழ்க்கை
காத்திருப்போம் கடமையாற்றுவோம்.
No comments:
Post a Comment