Tuesday, May 19, 2020

யசோதா

இந்த இரவுக்குள்
அனைத்தையும்
செய்து முடிக்க வேண்டும்.

நாளைய தினம்
நடந்துகொண்டிருப்பேன்.

கணத்த இதயம் கொண்ட
மனிதர்களை மீண்டும் தேர்ந்தெடுத்தவனை
சுமக்கமுடியாமல் நடந்துகொண்டிருப்பேன்.

புலம்பெயர்ந்தவனின்
வலிகள் துயர் நிறைந்தவை.
பிறந்தகத்தின் பரிவை
மறக்கவும் முடியாமல்
புகுந்தகத்தின் துயரங்களை
துறக்கவும் முடியாமல்
நடந்து கொண்டிருப்பவன்.

வெற்றுக் கால்கள்
இடரும் தருணங்களின் முழுமையும்
வாக்குச் சீட்டுக்கு
பணம் வாங்கிய தவறு
நினைவுகளை சூழ்ந்துவிடுகிறது.

தாகமெடுக்கும் தருணங்களில்
சாதி பார்த்து வாக்களித்த
பாவம் வருத்துகிறது.

உதவிக்கு யாருமின்றி
தவிக்கும் தருணங்களில்
மதங்களுக்கு மதிப்பளித்தது
நினைவுக்கு வருகிறது.

பசி வயிற்றை கிள்ளியெடுக்கும்
தருணங்கள் அமானுஷ்யமானவை
அவை அனைத்து தவறுகளையும்
அம்பலப்படுத்துகின்றன.

புலம்பெயர்ந்தவனின் நினைவுகளே
வராமல் இருக்கும் ஆட்சியாளர்களை
புலம் பெயர்த்துவதற்கு என்ன செய்வது?

No comments:

Post a Comment