குல்மொஹர் மலர்களின்
நேசத்திற்குரியவை
மே மாதங்கள்!
பால்யத்திலிருந்து
பார்க்கிறேன்
குல்மொஹர் மலர்களை!
அய்யாவீட்டிற்கு
எதிரிலிருந்தது
குல்மொஹர் மரம்!
முடிவிலா காதலில்
இறந்துபோன
பெரிய மாமா பதியமிட்டு
வளர்த்த மரம்!
இலைகளை உதிர்த்து
மொட்டையாக நிற்கும்
மரம் திடீரென பூத்து
குலுங்குவதை பலமுறை
பார்த்திருக்கிறேன்!
அச்சமும் அன்பும்
கலந்து அந்த மரத்தில்
எப்போதும் ஒரு வாசம் வீசும்!
மலர்களை யாசகம் கேட்டு
அந்த மரத்திடம்
எத்தனையோ முறை
நின்றிருக்கிறேன்!
குப்பை மேட்டில்
சாம்பல் கரி தேடி
அலைந்த நேரமெல்லாம்
பூக்களை உதிர்த்து
சிரித்திருக்கிறது!
குல்மொஹர் மலர்களின்
இதழ்களை பிய்த்து
நகங்களில் ஒட்டிக்கொண்டு
பேய்களென அச்சுறுத்தியிருக்கிறேன்!
சின்ன மாமாவிடம்
பல இரகசியங்களை
அந்த மரத்தடியில் அனைவரும்
ஒப்பிப்பதை பார்த்திருக்கிறேன்!
சிறுவயதில்
குழந்தையொன்றை
மடியில் வைத்து
குளிக்க வைத்திருக்கிறேன்!
அய்யாவீடு
இரண்டாகி நான்காகிய
நாளொன்றில்
பூக்களால் செய்யும்
ஆசிர்வாதங்கள் யாவற்றையும் அழித்துக்கொண்டது
குல்மொஹர் மரம்!
அய்யாவும்
இறந்து போனார்
ஒரு அதிகாலையில்
குல்மொஹர் மரம்போல!
ஒவ்வொரு மரமும்
ஏதேனுமொரு வரலாற்றை
யாரேனுமொருவர் மனதிலாவது
அழுத்தமாக
எழுதிவிடுகிறது!
No comments:
Post a Comment