Saturday, May 23, 2020

ஜமுனா

சமவெளி ஒன்றின்
மழைக்காலம்.

தீர்ந்துவிடாத
பசுமையுடன்
பரந்துகிடக்கிறது
பனித்துளிகள் போர்த்திய
புல்வெளிகள்.

தும்பை பூக்கள்
சூடியிருக்கும்
வெண்ணிற ஆடைகளில்
சற்றே ஆகாயத்தின் நீலம்
விரவியிருக்கிறது.

வெண்ணிறப் பறவைகள்
நடந்தலையும்
சமவெளியெங்கும்
கனவுகள் பறந்து திரிகின்றன.

வெளிர்மஞ்சள் நிற விலங்குகள்
உலாவரும்
புல்வெளிகளில்
விடுதலையின் ஓயாத பாடல்கள்
ஒலிக்கின்றன.

சரக்கொன்றை மரத்தின்
கிளைகளில்
அசைந்தபடி இருக்கிறது
பூக்களோடு
மரங்கொத்தி பறவையொன்று.

உதிக்கும் சூரியனின்
நிகழ்நேர
கோண மாறுபாடுகள்
நிழல்களை மாற்றுகின்றது.

ஒளியில் விழும்
நிழல்களின் எடையை
பனித்துளிகள் தாங்குவதன்
மர்மம் ஒருபோதும்
புரிவதில்லை!

2 comments:

  1. ரட்சகன் திரைப்படத்தில்
    'கையில் மிதக்கும் கனவா நீ' என்ற பாடலில்
    'நிலவில் பொருள்கள் எடையிழக்கும்
    நீரிலும் பொருள் எடையிழக்கும்' என்று வைரமுத்து எழுதியிருப்பார். 'எடை'க்குப் பதில் 'நிறை' என்று வைத்திருந்தால், நிலவு நீர் நிறை என மோனை நயத்துடன் வந்திருக்கும். ஆனால் அப்படி அவர் வைக்கவில்லை. ஏனெனில் எடை வேறு; நிறை வேறு. நிறை இழக்காது.

    இக்கவிதையில் நிறையைத் தாங்க முடியாது; எடையைத்தான் தாங்க முடியும்.

    ReplyDelete
  2. கோகுலகிருஷ்ணன் கந்தசாமிJune 30, 2020 at 11:03 AM

    வணக்கம் தோழர். //எடை வேறு; நிறை வேறு. நிறை இழக்காது.// தற்போதுதான் பார்த்தேன். திருத்தம் செய்துவிட்டேன். அன்பிற்கும் வருகைக்கும் நன்றி தோழர்.

    ReplyDelete