Tuesday, May 26, 2020

மயூரி

வசீகரனின்
நிழற்படங்கள்
நிகரற்ற இறைமையின்
இதயங்களில் வழியும் கருணையை
அலாதியாக வைத்திருக்கிறது.

வசீகரனின்
நிழற்படங்கள்
பேரமைதியை
விரல்களில் மடித்து உறங்கும்
குழந்தைமை ஆசைகளை
பொத்தி வைத்திருக்கிறது.

வசீகரனின்
நிழற்படங்கள்
இணையற்ற காதலின்
கண்களில் கசியும் அன்பை
அமானுஷ்யமாக வைத்திருக்கிறது.

வசீகரனின்
இளஞ்சிவப்பு வண்ண
நிழற்படமொன்றில்
பூக்களின் வாசம்
உணர்ந்திருக்கிறேன்.

வசீகரனின்
அடர் நீலவண்ண
நிழற்படங்களில் தான்
நான் பலமுறை
தொலைந்து போயிருக்கிறேன்.

வசீகரனின்
செஞ்சிவப்பு வண்ண
நிழற்படங்களில் தான்
என்னை பலமுறை
மீட்டெடுத்திருக்கிறேன்.

வசீகரனின்
நிழற்படங்கள் மீது
ஒருவிதமான
மதிப்புமிகு அன்பினை
எப்பொழுதும்
கொண்டிருக்கிறேன்.

வசீகரனின்
நிழற்படங்களை
பதிவுசெய்யும்
ஒளிப்படப்பெட்டி மட்டும்
அன்பை, ஆனந்தத்தை,
அமைதியை
எப்படி
பதிவு செய்கிறது?

உலகிற்குதான் அவை
வசீகரனின்
நிழற்படங்கள்.

உண்மையில் அவை
வசீகரனின் அகமனது.

வசீகரன் கண்டுகொண்ட
பிரபஞ்சத்தைவிட
வசீகரனை கண்டெடுத்த
உலகம் சிறியதாகவே இருக்கிறது
எப்பொழுதும்.

No comments:

Post a Comment