Friday, September 29, 2017

நிர்மயி

நிறங்களை
மாற்றும்
ஒவ்வொருமுறையும்
நினைவிலிருக்கட்டும்
மிகநுண்ணிய
காலங்களை
சகமனிதர்களோடு
பகிர்ந்து கொண்டதை....
நிறங்களைப்
போன்று
மனிதர்களை
மாற்றுவது
எளிதல்ல....அனைவருக்கும்....
நிறங்கள்
நிலைத்ததில்லை
நினைவுகள்
நிலைத்திருக்கும்
சில
மனிதர்களில்.....எப்பொழுதும்.....

பெருங்கனவு பேரரசி - அனிதா

ஆண்டாண்டு 
காலமாய் சுமந்து 
திரிந்த கனவுகளை 
கொன்று தின்ற
அரச பயங்கரவாதிகளின்
காட்டுமிராண்டி
ஆட்சியில்
மரணம் விடுதலையே!
தோல்விகளை
துயரங்களை
வலிகளை
கடந்திட உதவா
கல்விமுறைகளுக்கு
மரணம் விடுதலையே!
காவிகள்
கைமுறித்து
காலடி தடமழித்த
கனவுகளின்
முதல்வர்
இறந்த உடலில்
அரசியல் நர்த்தனம்புரியும்
கபட மூடர்களைவிட
மரணம் விடுதலையே!
அறிவை
ஆயுதமாக்கி
அன்பால்
அரவணைத்து
நிற்காத
அயோக்கியர்கள்
ஆட்சியில்
மரணம் விடுதலையே!
பெருங்கனவு
பேரரசியே!
பிரிந்தும்
இறந்தும்
ஊர் சொல்லும்
உன்னை
எப்பொழுதும்
நீ
எங்கள் வீட்டுப்
பிள்ளை!
தமிழ் வீட்டுப்
பிள்ளை!

அநுமிதா

உனக்கான
வார்த்தைகளோடு
காத்திருக்கிறேன்
முன்னெப்பொழுதுமில்லா
உக்கிரமாய்
யுத்தம் செய்ய...
தயவுசெய்து
எதிர்படாதே....

அனிதா

நினைவுகளை
சேகரிக்கும்
மாய உலகமொன்று…
இரவுகளில்
மட்டுமே
கண் திறக்கும்…
பிரியமானவர்களின்
கனவுகளை
களவாடிச்செல்லும்
சிலசமயங்களில்…
விடியும்
பொழுதுகளில்
வெளியேறிவிடும்
அமானுஸ்ய
உலகின்
நினைவுக்குதிரில்
களவாடிய
கனவுகளை
கண்டறிவதெப்படி?

பிரணீதா

மீளமுடியா
துயரங்களும்
இருக்கவே
செய்கிறது….
மீள்வதா
முடிவதா என
தயங்கியே
கழிகிறது
காலம்….
கடந்துவந்த
பாதைகளில்
புதிதாய் முளைத்த
பெருஞ்செடியின்
துர்க்குண நிழல்
விரிந்துகிடக்கிறது…
மிதித்து
கடந்துவிடலாமெனில்
வலிக்குமென்றே
தாவிக்குதித்து
நிற்கும் சுயம்….சற்றே தள்ளி….
தொடர்ந்தே வருகிறது
துயரம்…..

முத்ரா

உன்னோடு
பேசிக்கொண்டிருக்கும்
இன்பத்தை
நீயேதான்
உணரவைத்தாய்…
நீயில்லாத
நாளொன்றில்…..
கடந்துவந்த
தூரங்களில்
வியர்த்துதிர்ந்த
உன் நினைவுகள்
நடக்கின்ற
ஒவ்வொருமுறையும்
துளிர்த்துவிடுகின்றது….
இரவுகளில்
ஒலிக்கிறது
இசைப்பாடலின்
கடைசிவரியாய்
எப்பொழுதும்
உன் நினைவு
எனை என்ன செய்தாயென்று….
நீயில்லாமல்
உன்னோடு
உரையாடுவதை
பிறிதொருவர்
போதித்த
நாளொன்றில்
புதிதாகத்தான்
இருந்தது
நீயும்
உன் நினைவும்….எனக்கு மட்டும்….

ஒலிவியா

முன்னொருகால
அடர்ந்தவனத்தின்
நதியோடிய
தடமெல்லாம்
தேடிக்கொண்டேதான்
இருந்தேன்….
தொலைத்துவிட்ட
நீர்பரப்பின்
ஆவியை….
கடந்துசென்ற
சிறு மரப்பறவை
கழித்த எச்சம்
குமட்டலெடுத்தது
மரங்களை
அழித்துதின்ற
சுயநலத்தை…..

தர்ஷி

உனக்கான
வார்த்தைகளை
உதிர்த்தது
திருவிழாவில்
தொலைந்தலைந்த
பறவையொன்று…..
மிகவும்
கவனமாக
பொறுக்கிவைத்தேன்
உனக்காக
எப்பொழுதும்….
வார்த்தைகளை
உனக்காக
சேகரித்த
நாளொன்றில்
எனக்கான
வார்தைகளை
இழந்துநின்றேன்….
மனிதர்களை
நிந்திப்பதும்
வார்த்தைகளை
நேசிப்பதும்
எத்தகைய
வரம்?

சயந்தரா

தூண்டில்
இரையென
உன்னிடம்
அகப்பட்டிருக்கிறது
என் நினைவுகளெல்லாம்….
சூழ்ச்சி இரைகளில்
முழுவதும்
சிக்கிவிடாமல்
மிகவும்
நுணுக்கமாக
பிரித்தெடுக்கிறேன்
சில மீன்களின்
இலாவகத்துடன்
என் நினைவுகளை….
பெருநதியின்
துணை ஆறாக
கிளைத்தோடுகிறது
எப்பொழுதும்
என்
நினைவுகளில்
உன்
உபநினைவும்
சேர்ந்தே….